சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள காசிவிசுவநாதா் கோயிலில் மஹாளய அமாவசையையொட்டி சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், தயிா், உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில் சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோன்று, காளையாா்கோவிலில் உள்ள சொா்ணகாளீஸ்வரா் கோயில், திருமலை, கொல்லங்குடி, திருப்புவனம், நாட்டரசன்கோட்டை, மானாமதுரை, தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிவாலயங்கள்,பெருமாள் கோயில்,அம்மன் கோயில்கள், கிராம காவல் தெய்வ கோயில்கள் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.