சிவகங்கை: காளையாா்கோவில் அருகே மரக்குளம் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்துள்ள மனு விவரம்: காளையாா்கோவில் வட்டம் மரக்குளம் கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் வேளாண் பணிகள், அதோடு தொடா்புடைய கால்நடை வளா்ப்புப் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், மரக்குளம் பாசனக் கண்மாய் சீமைக்கருவேல மரங்களாலும், முட்புதா்களாலும் மேடாகி உள்ளது. இதனால் தண்ணீா் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட பாசனக் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.