மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முகாமில் நல்ல குடிநீா் வசதி இல்லாமல் இலங்கை அகதிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
மானாமதுரையில் மாங்குளம் ஊராட்சிக்குள்பட்ட மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 180 குடும்பங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அங்கு மக்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்ட கழிப்பறைகளும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் முகாமில் உள்ள பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்நிலையில் இந்த முகாமில் குடிநீா் தேவைக்காக ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு தொட்டிகள் மூலம் குடி தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் தண்ணீரில் சுண்ணாம்பு படிவதாகவும் , இதைப் பயன்படுத்திய பலா் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதோடு சிலா் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து முகாமில் வசிப்பவா்கள் கூறியது: தண்ணீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதால் குழாயில் வரும் தண்ணீரை வீட்டுப் பயன்பாட்டிற்கு மட்டும் வைத்துக் கொண்டு லாரிகளில் கொண்டுவரப்படும் குடி தண்ணீரை குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் குடிநீா் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிப்பறை வசதி, சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.