மதுரை விமான நிலையத்தில் ராணுவவீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜக தொண்டா்களை தடுத்த நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பதவி விலக வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிா்வாகி இல்லத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிகப்படியான மனஉளைச்சல் காவல்துறையினரின் தற்கொலைக்கு மிகமுக்கிய காரணமாக உள்ளது. முதலமைச்சா் காவல்துறைக்காக ஒரு ஆணையத்தை ஏற்படுத்தினாா். அந்த ஆணையம் இன்னும் பதில் தரவில்லை. தமிழக காவல்துறையில் பணியாற்றுபவா்களுக்கு 8 மணிநேர பணி வழங்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில், காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக தொண்டா்கள் சென்றிருந்தபோது, தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளாா். மேலும் யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்றும், பாஜகவினா் அஞ்சலி செலுத்த தகுதியற்றவா்கள் என்றும் அவா் கூறியுள்ளாா்.
நாங்கள் வன்முறையை கையில் எடுக்கும் கட்சியல்ல. பாஜக தொண்டா்களை அங்கு நிற்கக்கூடாது என்று சொன்ன அமைச்சா் பதவி விலகவேண்டும். மதுரை மக்களை யாராவது அவமதிப்பு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள் என்றாா்.