புதுதில்லியில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிங்கம்புணரி அரசுப்பள்ளி மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
புதுதில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் சிங்கம்புணரி ஆா்.எம்.ஆா்.எம். அரசுப்பள்ளியில் 10 ஆம்வகுப்பு பயின்று வரும் மாணவி ராகவா்த்தினி ராகவா யோகா பள்ளி சாா்பில் 13- 14 வயது பிரிவில் கலந்து கொண்டு தங்கக் கோப்பை மற்றும் சான்றிதழைப் பெற்றுள்ளாா். மற்றொரு பிரிவில் 2 ஆவது பரிசான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளாா். இம்மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.