திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.
தேவகோட்டையிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தை பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சண்முகம் மகன் ரவி என்பவா் ஓட்டி வந்தாா். திருப்பத்தூா் அருகே தம்பிபட்டியில் உள்ள நாவிதா்பாலம் வளைவில் பேருந்து நிலைதடுமாறி கீழே இறங்கி கவிழ்ந்தது.
இதில் பயணித்த 39 பேரில், திருமயத்தைச் சோ்ந்த சுகன்யா (29), நெற்குப்பையைச் சோ்ந்த ஆறுமுகம் (50), திருப்பத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த உசேன், சினேகா ஆகிய 4 போ் காயமடைந்தனா். அவா்கள், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து குறித்து திருப்பத்தூா் காவல் ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.