சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்திருப்பது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் சனிக்கிழமை தெரியவந்தது.
காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா. இவரது மகன் கருத்தபாண்டியன் (17), காரைக்குடியில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் கல்லூரிச் சாலையில் உள்ள சிக்னல் பகுதியை கடக்க முயன்ற போது அரசுப் பேருந்து மோதியுள்ளது. இச்சம்பவத்தில் பலத்த காயமைடந்த அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலையில் உயிரிழந்துள்ளாா். இதுகுறித்த தகவலை காவல் துறைக்கு அவரது பெற்றோா் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுக் காட்சி வெளியாகி சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து காவல்துறையினா் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.