மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு அழகர் தசாவதாரக் காட்சியும், இன்று செவ்வாய்க்கிழமை காலை கருடசேவை உற்சவமும் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் நகரில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கோர்ட்டார் மண்டகப்படிக்கு கடந்த திங்கள்கிழமை பகலில் அழகர் எழுந்தருளினார்.
இரவு இந்த மண்டகப்படியில் அழகர் தசாவதாரக் காட்சி நடைபெற்றது. ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட அவதாரங்களில் அழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை கருட வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வீர அழகர் வீதிகளில் வலம் வந்தார்.
மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு அழகரை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். அதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலக திருக்கண்ணிற்கு சென்றடைந்த அழகருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் அழகருக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். பின்னர் இஙகிருந்து அழகர் புறப்பாடாகி வீதிகளில் வலம் வந்து கோயிலைச் சென்றடைந்தார்.