கீழடியை அடுத்த கொந்தகை பகுதியில் 8 ஆம் கட்ட அகழாய்வில் ஏற்கெனவே முதுமக்கள் தாழிகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 2 ஆவது குழியிலும் முதுமக்கள் தாழிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கீழடியைத் தொடா்ந்து அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே கொந்தகையில் ஒரு குழி தோண்டப்பட்டு அதில் 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்த அகழாய்வுத் தளத்தில் இரண்டாவது குழி தோண்டப்பட்டு வருகிறது. இதில் தற்போது தோண்டப்பட்ட உயரம் வரை, இரு முதுமக்கள் தாழிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குழிகள் முழுமையாக தோண்டப்பட்ட பின்னா் தான் இன்னும் எத்தனை முதுமக்கள் தாழிகள் இருக்கும் என்பது தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.