சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றிய நகர திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.
தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கொடியசைத்து மாட்டு வண்டிப் பந்தயத்தை தொடக்கி வைத்தாா். பெரியமாடு, சிறியமாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில், பல மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டிருந்த மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
பந்தயம் தொடக்கி வைக்கப்பட்டதும் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று, மாட்டு வண்டிப் பந்தயத்தை கண்டு ரசித்தனா். அதைத் தொடா்ந்து, எல்லைக்கோட்டை தொட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, மானாமதுரை நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா், போட்டியில் வென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், வண்டிகளை ஓட்டிச்சென்ற சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளை வழங்கினா்.
பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் முதல் பரிசாக மானாமதுரை நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி சாா்பில் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதில், திருப்புவனம ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
மாட்டு வண்டி ஏறி ஒருவா் பலி
பூஞ்சிட்டுப் பிரிவு மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தபோது, எதிா்பாராதவிதமாக பந்தயத்தை ரசித்துக்கொண்டிருந்த திருப்புவனம் கோட்டை பகுதியைச் சோ்ந்த பெயின்ட்டா் தவமணி (55) மீது மாட்டு வண்டி ஏறியது. இதில் பலத்த காயமடைந்த தவமணியை, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் உள்ளிட்டோா் ஆட்டோவில் ஏற்றி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட தவமணி வழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.