சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ 16 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். சருகணியாரு வடிநில உப கோட்டத்தை சேர்ந்த மானாமதுரை நகர்ப் பகுதியை ஒட்டியுள்ள கால்பிரிவு விலக்குப் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ 16.85 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் திட்டத்துக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி முன்னிலை வகித்தார். தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பூமி பூஜையில் பங்கேற்று தடுப்பணை கட்டும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மானாமதுரை நகராட்சித் தலைவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கோட்ட பொறியாளர் பாரதிதாசன் உதவி பொறியளர் முருகேசன், மானாமதுரை உதவி பொறியாளர் செந்தில்குமார், திருப்புவனம் உதவி பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தடுப்பணைத் திட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், "மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதன்மூலம் கீழப்பசலை, சங்கமங்கலம், ஆதனூர், மேலப்பசலை ஆகிய கண்மாய்களுக்கான விவசாய நிலங்கள் பயனடையும்.
மேலும், செய்களத்தூர், கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பாசனக் கிணறுகள் உள்ளிட்ட குடிநீர் ஆதார மோட்டார் கிணறுகளும் பலன்பெறும். இந்த தடுப்பணை மூலம் மேற்கண்ட கண்மாய்கள் மற்றும் பாசனக் கிணறுகளால் 1700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மதுரை மாவட்டம் விரகனூர் மதகு அணையில் இருந்து மானாமதுரை வரை மேலும் பல இடங்களில் தடுப்பணை கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளுமப விரைவில் தொடங்கும்" என்றார்.