மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள தஞ்சாக்கூர் கோயிலில் திங்கள்கிழமை ராகு-கேது பெயர்ச்சி விழா தொடங்கியது.
தஞ்சாக்கூரில் ஒரே இடத்தில் ஸ்ரீ ஜெயம் பெருமாள், திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ ஜெகதீஸ்வரர். சுப்பிரமணியருக்கு என தனித்தனி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயம் பெருமாள் கோயிலில், பெருமாளின் பத்து அவதாரங்களுக்கும் தனி சன்னதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியர் கோயிலில் 18 சித்தர்களுக்கும் தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் சுப்பிரமணியர் கோயிலில் தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக தவக்கோல சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவனுக்கு உகந்த கடந்த மாசி சிவராத்திரியில் குடமுழுக்கு விழா நடைபெற்று முடிந்தது.
சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் ராகு-கேது பகவானுக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற உள்ளதால் தஞ்சாக்கூர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ராகு கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது தினமும் இரவு ராகு-கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகிறது. 20 ஆம் தேதி சுப்ரமணியர் கோயில் தெப்பத்தில் எழுந்தருளியுள்ள ராகு-கேது பகவான் சன்னதியில் பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
சுப்ரமணியர் கோயிலில் உத்திர விழா மற்றும் ராகு-கேது பெயர்ச்சி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு விழா நாட்களில் கோயிலில் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. தஞ்சாக்கூரிலுள்ள மேற்கண்ட அனைத்து கோயில்களும் இரவில் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
தஞ்சாக்கூரில் ஒரே இடத்தில் எழுந்தருளியுள்ள பத்து அவதாரங்களுடன் கூடிய ஸ்ரீ ஜெயம் பெருமாள், ஸ்ரீ ஜெகதீஸ்வரர், 18 சித்தர்களுடன் கூடிய சுப்பிரமணியர், ராகு-கேது பகவான் கோயில்களைக் கண்டு சுவாமி தரிசனம் செய்ய தினமும் திரளான பக்தர்கள் தஞ்சாக்கூருக்கு வருகின்றனர். பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான கே.ஏ. பாலசுப்பிரமணியன் சுவாமி செய்துள்ளார்.