மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் இணைந்து அகற்றினர்.
சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மானாமதுரை வட்டம் எம். கரிசல்குளம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கண்மாயை ஆக்கிரமித்து வீடுகள், கழிவறை உள்ளிட்ட பல கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வருவாய்த்துறையினர், பொதுப்பணித்தறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்தனர். இதில் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என வருவாய்த்துறையினர் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள யாரும் முன்வராததால் வருவாய்துறையினர், பொதுப்பணித் துறையினர் இணைந்து கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் தலைமையில் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது ஜேசிபி இயநதிரம் மூலம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கழிவறை, ஆட்டுக் கொட்டகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது மானாமதுரை பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சேகர், வருவாய் வட்டாட்சியர் லதா, கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன் உள்ளிட்ட வருவாய் துறையினர் உடனிருந்தனர்.