மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் கோயிலில் தவக்கோல சிவனை தரிசிக்க வட மாநில பக்தர்கள் குவிந்தனர்.
தஞ்சாக்கூரில் ஒரே இடத்தில் ஸ்ரீ ஜெயம் பெருமாள், ஸ்ரீ ஜெகதீஸ்வரர், சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் ராகு-கேது பகவானுக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. இதேபோல் சுப்பிரமணியர் சன்னதியில் தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக தவக்கோல சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சமீபத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
இதையடுத்து தவக்கோல சிவனையும் தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ள ராகு-கேது பகவானையும் தரிசிக்க தினமும் ஏராளமானோர் தஞ்சாக்கூர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தவக்கோல சிவனைக் கண்டு தரிசிக்க தஞ்சாக்கூர் கோயிலுக்கு வந்தனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் மதுரை வந்த இவர்கள், அங்கிருந்து சுற்றுலா வேன்கள் மூலம் தஞ்சாக்கூர் கோயிலுக்கு வந்து தவக்கோல சிவன், ராகு-கேது பகவானை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான பாலசுப்பிரமணியன் சிவனுக்கான பூஜைகளை நடத்தினார். மேலும் கோயிலில் இந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.