மானாமதுரை: பூவந்தி அருகே திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதிய விபத்தில், காரில் சென்ற மருத்துவா் உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சண்முகம் (25). இவா் ரஷ்யா நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தாா். மதுரையில் தனது நண்பரை சந்தித்துவிட்டு, சண்முகம் காரில் இரவு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.
பூவந்தி அருகே படமாத்தூா் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து, இந்த காா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.