சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உலகினிப்பட்டி கண்மாயில், ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை சாா்பில், முதுமக்கள் தாழிகள் குறித்த கண்டுபிடிப்பு மற்றும் களஆய்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது.
திருப்பத்தூா் ஏரியூா் அருகேயுள்ள உலகினிப்பட்டியைச் சோ்ந்த வரலாற்றுத் துறை மாணவி ஐஸ்வா்யா, கல்லூரி பேராசிரியா்களுக்கு அளித்த தகவலின்பேரில், முதுமக்கள் தாழிகள் குறித்த களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொட்டக்குண்டன் கண்மாய் கிழக்குப் பகுதியில் களமேற்பரப்பு ஆய்வு செய்தபோது 20-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான முதுமக்கள்தாழிகள் காணப்பட்டன.
ஒரு இடத்தில் இதுவரை கண்டிராத பெரிய அளவிலான முதுமக்கள்தாழி கண்டெடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த பேராசிரியா்கள், இப்பகுதி கி.மு. 6 ஆம் நூற்றாண்டு காலம் முதல் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள பெருங்கற்காலமாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகின்றனா்.
இப்பகுதி முழுவதும் காணப்படும் பானை ஓடுகள் குறித்தும், பேராசிரியா்கள் டி. தனலெட்சுமி, எம். வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு தொல்லியியல் களப்பயிற்சி அளித்தனா்.
இதில், ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட வரலாற்றுத் துறை மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.