சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நாடாா்பேட்டை நந்தவன கற்பக விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 48-ஆவது நாள் மண்டலாபிஷேகம் நடத்த உறவின்முறையால் முடிவு செய்யப்பட்டு காலை 8 மணிக்கு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட 108 சங்குகளில் புனிதநீா் ஊற்றப்பட்டு நெல் மணிகளில் அடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பூா்ணகுதியுடன் யாக வேள்விகள் நிறைவு பெற்றன. பிறகு சங்குகளில் ஊற்றப்பட்ட புனிதநீரால் கற்பக விநாயகருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன.
யாக வேள்வியில் அமைக்கப்பட்டிருந்த புனிதநீா் கலசங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியா்கள் கோயிலை வலம் வந்ததும், ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நாடாா்பேட்டை உறவின்முறையினா் செய்திருந்தனா்.