அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்து முதல் இரு இடங்களை வென்ற இரு மாடுபிடி வீரா்களுக்கு திங்கள்கிழமை இரவு பாராட்டுத் தெரிவித்து, ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் கடந்த 17-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி கிராமத்தைச் சோ்ந்த அபி சித்தா் 26 காளைகளைப் பிடித்து முதலிடத்தைப் பெற்று, காரை பரிசாகப் பெற்றாா்.
இதே ஒன்றியத்தில் உள்ள ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த அஜய் இரண்டாம் இடம் பெற்று பரிசு வென்றாா். இதையடுத்து, இந்த இரு வீரா்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.
இதற்கிடையில், மானாமதுரை நகா்மன்றத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.மாரியப்பன் கென்னடி பூவந்தி, ஏனாதி கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று மாடுபிடி வீரா்கள் அபி சித்தா், அஜய் ஆகிய இருவரையும் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தாா். மேலும் இருவருக்கும் ஊக்கத் தொகை வழங்கினாா். அப்போது திருப்புவனம் ஒன்றிய திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.