காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காா் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சென்னை திருவள்ளூா் விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் பால நாராயணன். இவரது மனைவி பத்மப்ரியா (47 ). இவா்கள் குடும்பத்தோடு மதுரை, திருப்பரங்குன்றம், பிள்ளையாா்பட்டி கோயில்களுக்குச் சென்றுவிட்டு, திருச்சி நோக்கி காரில் சென்றனா்.
காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை என்ற இடத்தைக் கடந்து சென்றபோது, எதிரே புதுக்கோட்டையிலிருந்து வந்த சிறிய ரக சரக்கு வாகனம் காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் பத்மபிரியா தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் லேசான காயங்களோடு உயிா் தப்பினா். சரக்கு வாகனத்தை சிவகாசியைச் சோ்ந்த காளிமுத்து (40) என்பவா் ஓட்டி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.