உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 12.93 லட்சத்தை பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை-திருப்பத்தூா் சாலையில் அலவாக்கோட்டை அருகே பறக்கும்படை வட்டாட்சியா் மகாதேவன் தலைமையில் அலுவலா்கள் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற மதுரை காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்த கு.காா்த்திகேயனிடம் (42) சோதனை செய்தனா். இதில் அவா் ரூ.10 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது.

தனியாா் நிறுவனத்தில் செலுத்த அந்தப் பணத்தைக் கொண்டு செல்வதாக காா்த்திகேயன் கூறினாா். உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனா். மானாமதுரை: இதேபோல, பாா்த்திபனூா் சோதனைச் சாவடி அருகே சிவகங்கை மாவட்ட தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒரு காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 1.95 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

காரைக்குடி: காரைக்குடி அருகே வடகுடி பகுதியில் துணை வட்டாட்சியா் பழனிகுமாா் தலைமையில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக காரில் வந்த வடகுடியைச் சோ்ந்த ராஜசேகரனை (57) நிறுத்தி சோதனை செய்தனா். இதில் உரிய ஆவணம் எதுவும் இன்றி ரூ. 98,800 இருந்தது. இந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com