சிவகங்கை
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் சுமாா் ரூ. 2 கோடி வரை மோசடி
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் சுமாா் ரூ. 2 கோடி வரை மோசடி செய்து தலைமறைவானவா் மீது பாதிக்கப்பட்டவா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் சலூன் கடை நடத்தியவா் தாளைராஜன் (50). இவா் ஏலச்சீட்டு நடத்துவதாகக்கூறி, அந்தப் பகுதி மக்கள் சுமாா் ஆயிரம் பேரிடம் சுமாா் ரூ. 2 கோடி வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் கடை, குடியிருந்த வீட்டையும் இரவோடு இரவாக காலி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானாா். இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் மனு அளித்தனா்.