சிவகாசியில் சீமைக் கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம், பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நீதிபதியுடன், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், மாவட்ட வருவாய் அலுவலர் சி,முத்துக்குமரன், சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, செயலர் அபிரூபன், நிர்வாகி கணேசன் ஆகியோருடன் நீதிபதி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் குமரேசன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் ராஜ்குமார் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், சிவகாசி தொழிலதிபர் தெய்வம் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையையும், நீதிபதி செல்வத்திடம், சீமைக் கருவேல மரங்களை அகற்ற நிதியுதவி அளித்தனர்.
இதன் பின் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் செய்தியாளர்களிடம் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 870 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் உரிமையாளர்கள், தங்கள் ஆலை இருக்கும் பகுதியில் உள்ள கிராமத்தில் சீமை கருவேல் மரங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தில் 2 அல்லது 3 பட்டாசு ஆலைகள் இருந்தால் மரத்தை அகற்றும் பணிக்கு ஆகும் செலவினை பகிர்த்து கொள்ள வேண்டும். சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்றார்.