கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை பகல் நேர ரயில் டிசம்பர் முதல் தேதியிலிருந்து முன் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். மேலும் இந்த ரயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரத்திலிருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு இரவு 9 மணிக்கு செல்லும் வகையிலும், மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 10 மணிக்கு தாம்பரம் செல்லும் வகையில் கடந்த 3 மாதமாக பகல் நேர சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே நிர்வாகம் இயக்கியது.
இதனால் 9 மாவட்ட மக்கள் பயனடைந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், ரயில் திடீரென நிறுத்தப்பட்டது பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயிலை தொடர்ந்து தினமும் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.