விருதுநகர் மாவட்ட நான்கு வழிச் சாலையில் 15 கி.மீ, க்குள் நான்கு இடங்களில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
காஷ்மீர்- கன்னியாகுமரி வரை வாகனங்கள் வேகமாக செல்வதற்காக நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு தற்போது மூன்று நேரத்திற்குள் வாகனங்கள் சென்று விடுகின்றன.
வாகனங்கள் தடையின்றி வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட நான்கு வழிச் சாலையில் ஆங்காங்கே தடுப்பு அரண்கள் (பேரி கார்டு) வைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தின் எல்கையான சத்திர ரெட்டியபட்டி, புல்லலக்கோட்டை விலக்கு, ஆட்சியர் அலுவலகம், ஆர்ஆர் நகர் என நான்கு இடங்களில், 15 கி.மீ க்குள் தடுப்பு அரண்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், கார், பேருந்து உள்ளிட்டவைகளில் பயணம் செல்வோர், இந்த இடங்களில் மிக குறைந்த வேகத்திலே செல்ல வேண்டிய நிலையுள்ளது.
மேலும், கண்டெய்னர் போன்ற நீண்ட வாகனங்கள் தடுப்பு அரண்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றன. இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனங்கள் தடுப்பு அரண்கள் இருப்பது தெரியாமல் விபத்தில சிக்குகின்றன.
பொதுமக்கள் அடிக்கடி நான்குவழிச்சாலையின் குறுக்கே செல்வதால் தடுப்பு அரண் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கு பதிலாக போக்குவரத்து போலீஸாரை அங்கு நியமித்து பணி பாதசாரிகள் கடப்பதை முறைப்படுத்தினால், இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
எனவே, நான்கு வழி சாலை முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு அரண்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.