காரியாபட்டி அருகே வடகரை குண்டாறு பகுதியில் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பிசிண்டி கிராமத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரியாபட்டி ஒன்றியம், பிசிண்டி வடகரை குண்டாறு அருகே பட்டா நிலங்கள் உள்ளன. இவற்றில், அரசு அனுமதியின்றி தினமும் ஏராளமான லாரிகளில் மணல் அள்ளி கடத்தப்படுகின்றது. மேலும், இச்சாலையானது ஒருவழிப் பாதையாக உள்ளதால், வேகமாகச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயமும் உள்ளது.
எனவே, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.