சிவகாசி நகராட்சிப் பொறியாளர் செவ்வாய்க்கிழமை ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள நேருஜி நகரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (55). நகராட்சி ஒப்பந்ததாரரான இவருக்கு, நகர் பகுதியில் 3 இடங்களில் தலா ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், நகராட்சிப் பொறியாளரான ரவீந்திரன் (55), ஒப்பந்தத் தொகையான ரூ. 6 லட்சத்துக்கு 7 சதவிகிதம் என ரூ. 42 ஆயிரம் தனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினாராம். அதற்கு, முதல் தவணையாக ரூ. 25 ஆயிரம் கொடுக்கிறேன் என பொன்னுச்சாமி கூறியுள்ளார். அதையடுத்து, பென்னுச்சாமி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பொன்னுச்சாமியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர், காரனேசன் காலனியில் உள்ள பொறியாளர் ரவீந்திரன் வீட்டுக்கு பொன்னுச்சாமி சென்று, அவரிடம் ரூ. 25 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த போலீஸார் ரவீந்திரனை கையும் களவுமாகப் பிடித்தனர்.