சிவகாசி அருகே கூலி தொழிலாளியின் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (37). இவர், வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். இவர்களுக்குத் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தை இல்லையாம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு இருவரும் தூங்கிவிட்டனராம். வெள்ளிக்கிழமை அதிகாலை, ராஜேந்திரன் உடல்நிலை சரியில்லை எனக் கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தாராம். வீடு திறந்திருந்த நிலையில், அக்கம்பக்கம் உள்ளவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, கிருஷ்ணம்மாள் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தாராம். தகவலறிந்து வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது என்றும், இதனால் அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்படுவதுண்டு என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, கிருஷ்ணம்மாள் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.