அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி கிராம பிரதான சாலையில் தொடரும் விபத்துக்களைத் தடுக்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையம்பட்டி கிராமத்தில் மதுரையை நோக்கிச் செல்லும் பிரதான சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளிக்கும் இதனையடுத்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் இடையில் தமிழ் எழுத்தான "ட' வடிவ சாலை வளைவு உள்ளது. இப்பகுதியில் அபாயகரமான வளைவு எனும் அறிவிப்போ, பள்ளி உள்ள பகுதி எனும் அறிவிப்புப் பலகைகளோ வைக்கப்படவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வரும், கார், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் பலமுறை இச்சாலை வளைவில் விபத்தில் சிக்கியுள்ளன.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே சாலை வளைவில் சரக்கு ஆட்டோவுடன் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அறிவிப்புப் பலகை இல்லாததாலும் வேகத்தடை இல்லாததாலுமே இவ்விபத்துக்கள் தொடர்ந்து நேர்வதாக இப்பகுதி பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
எனவே விபத்துக்களைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி சாலையில் வேகத்தடையும், அறிவிப்புப் பலகையும் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.