ஸ்ரீவிலி. பள்ளி மாணவருக்கு சிறந்த தேசிய மாணவர் படை வீரர் விருது வழங்கப்பட்டது.
தேசிய மாணவர் படையில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியிலும் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டாலியன் அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு 5-ஆவது சைகை அணி சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் டி.பிராங்கிளின் ஆண்டோ மற்றும் கே. ஜனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை மண்டல அளவிலான இறுதி தேர்வு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராஜபாளையம் ஆகிய பட்டாலியன்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 10 நாள்கள் நடைபெற்ற தேர்வுப் போட்டியில் மாணவர் டி. பிராங்கிளின் ஆண்டோ ஜூனியர் பிரிவில் சிறந்த தேசிய மாணவர் படை வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு தமிழ்நாடு 5 ஆவது சைகை அணியின் தலைமை அதிகாரி கர்னல் ராகுல் ஸ்ரீவஸ்தவா, பாராட்டுச் சான்றிதழ், ரூ.4500 ரொக்கப் பரிசை வழங்கினார். விருது பெற்ற மாணவரை பள்ளியின் தாளாளர் எம்.கே.முகமது மைதீன், முதல்வர் அ.சுதாகரன், என்.சி.சி. அலுவலர் செ.முரசொலி ஆகியோர் பாராட்டினர்.