பொது விநியோகத்திட்டத்தைப் பாதுகாக்கக்கோரி, நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு தொமுச சார்பில் முகம்மது ஜலீல்தீன், சிஐடியு சார்பில் எம்.அசோகன், அரசு பணியாளர் சங்க நிர்வாகி எஸ்.மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தொமுச பேரவை செயலாளர் ஆர்.பொன்ராம், சிஐடியு மாநில செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். அதில், பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். பொட்டல முறையை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.