விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக உள்ள பெரியகண்மாயின் நீர்வரத்துக் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
பந்தல்குடி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியின் குடிநீர் தேவைக்கு, அருகிலுள்ள பெரியகண்மாயில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இக்கண்மாயின் நீர்வரத்துக் கால்வாயானது பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி புதர் மண்டி, மக்காத குப்பைகள் குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இக்கண்மாய்க்கு மழைநீர் வரத்து பெருமளவில் தடைப்பட்டு, குடிநீர் ஆதாரமும், நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்புகளுக்கிடையே செல்லும் இந்த நீர்வரத்துக் கால்வாயில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக் கேடு நிலவுகிறது.
இந்த நீர்வரத்துக் கால்வாயைச் சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, குடிநீர்ஆதாரமாக உள்ள கண்மாயின் நீர்வரத்து தடைபடாத வகையிலும், ஆங்காங்கே அடைப்புகளால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் விதமாகவும், இந்த நீர்வரத்துக் கால்வாயை விரைவில் தூர்வாரி சீரமைக்க அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.