விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு கட்டுவதற்கான வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்தவர் இளங்கோ, மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முகவூரில் வசிக்கும் இவரது தந்தையின் இடத்தில் கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்து, இவர் செட்டியார்பட்டி ஊராட்சி அலுவலகத்தை நாடியுள்ளார். கட்டடம் கட்டுவதற்கு வரைபட ஒப்புதல் பெற அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை 7,240 ரூபாயை 3 தவணைகளாக வங்கி மூலம் செலுத்தியுள்ளார். இருப்பினும், இளங்கோவுக்கு வரைபட ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து செட்டியார்பட்டி பேரூராட்சி வரி வசூலிப்பாளர் காமராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒப்புதல் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து இளங்கோ, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், டி.எஸ்.பி. சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய காண்டீபன், பூமிநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர், பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு, தண்ணீர் திறந்துவிடும் தனது உதவியாளர் சதீஷ் என்பவரிடம் பணத்தை கொடுக்குமாறு இளங்கோவிடம் வரி வசூலிப்பாளர் காமராஜ் தெரிவித்துள்ளார். அதையடுத்து, இளங்கோ லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை சதீஷிடம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சதீஷ் மற்றும் காமராஜை கையும் களவுமாகப் பிடித்தனர். லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.