காவல் மற்றும் தீயணைப்பு துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக புதிதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலை பள்ளியில் பிப். 17 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலைக் காவலர்(ஆயுதப்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் முதலான மொத்தம் 6140 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. மேலும் வேலை தேடுவோர் மற்றும் பதிவுதாரர்களின் வசதி, போக்குவரத்து அலைச்சலைக் குறைப்பதற்காக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் பிப். 17 முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றுடன் 17.02.2018 அன்று சி.எம்.எஸ் பள்ளிக்கு நேரில் சென்று தங்களது வருகையினைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை விருதுநகர் மாவட்ட பதிவுதாரர்கள் மற்றும் வேலை நாடுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்அவர்.