இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே உள்ள புதிய காலணி காப்பகம், பக்தர்கள் தங்கும் விடுதி ஆகிய கட்டடத்தை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்திபெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காலணிகளையும், உடைமைகளையும் பாதுகாப்பதற்கு, கோயில் சார்பில் காலணி காப்பகம் அமைக்கப்படாமல் இருந்தது. மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் இடவசதியும் இல்லாமல் இருந்தது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பக்தர்களின் தொடர் கோரிக்கை காரணமாக, கோயில் நிர்வாகம் சார்பில் சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய காலணி காப்பகம் கட்டப்பட்டது. ஆனால், 6 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், சுற்றுலாத் துறை சார்பில் கோயிலின் அருகே பக்தர்களுக்கு தங்கும் விடுதியும் கட்டப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவும் திறக்கப்படாமல் உள்ளது.
எனவே பக்தர்களின் நலன் கருதி, காலணி காப்பகத்தையும், தங்கும் விடுதியையும் விரைவில் திறக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.