விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் உள்ள அருள்மிகு திருமேனிநாதர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
திருச்சுழியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருமேனிநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், இதனருகிலுள்ள குண்டாற்றில் சடங்குகள் செய்வதற்கும் மற்றும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விழா நாள்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோயில் முன்புள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், அனைத்துத் தரப்பினரும் வெயில், மழைக்கு ஒதுங்க முடியாமல் சிரமப்பட நேரிடுகிறது. மேலும், அருகிலுள்ள சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் இந்த பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்துக்காக காத்து நிற்கின்றனர்.
எனவே, இக் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.