அருப்புக்கோட்டை அருகே அரசுக் கல்லூரி சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதால் மழைக்காலத்தில் மாணவர்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை - பந்தல்குடி சாலையில் செட்டிக்குறிச்சி கிராமத்தில் மதுரை காமராஜர் பல்கலை.யின் உறுப்புக் கல்லூரி உள்ளது. பந்தல்குடி பிரதானச் சாலையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் உள்புறம் கல்லூரி அமைந்துள்ளது. பிரதானச் சாலையிலிருந்து கல்லூரிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மழைக்காலத்தில் இச்சாலை சேறும், சகதியுமாக ஆகிவிடுகிறது. இந்நிலையில், இதனை தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால், வெறுமனே மண் மட்டும் கொட்டப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் சாலை, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு இச்சாலையில் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். எனவே, தார்ச்சாலைப் பணியை மீண்டும் தொடங்கி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.