விருதுநகரில் புதர் மண்டியுள்ள நீர்வரத்து ஓடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அகமது நகரிலிருந்து நான்குவழிச் சாலைக்குச் செல்லும் வழியில் போலீஸ் பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் இரு பகுதிகளிலும் உள்ள நீர்வரத்து ஓடையில், சின்னமூப்பன்பட்டி, சத்திரெட்டியபட்டி, வேலுச்சாமி நகர், என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் செல்கிறது. தற்போது, பருவமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதியில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், போலீஸ் பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடையில் ஏராளமான முள்செடிகளும், புதர்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. சமீபத்தில் மழை பெய்தபோது, இந்த ஓடையில் தண்ணீர் செல்லமுடியாமல் தேங்கியது. இதனால், அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து, பொதுமக்கள் அவதியடைந்தனர்.
எனவே, போலீஸ் பாலத்தின் இருபுறத்திலும் உள்ள நீர்வரத்து ஓடைகளை தூர்வாருவதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.