அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்தில் நியாய விலைக் கடை கட்டடத்தின் கூரைப்பகுதி சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளதால் அதை விரைவில் சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலியூரான் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நியாயவிலைக் கடை செயல்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இதன் கட்டடம் உரிய பராமரிப்பில்லாததால் கட்டடத்தின் கான்கிரீட் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் சேதமடைந்துள்ள பகுதியில் உள்ளிருக்கும் கட்டுமானக் கம்பிகள் வெளியேத் தெரிகின்றன. இதனால் எந்நேரமும் கூரைப் பகுதி இடிந்து விழும் அபாயம் உள்ளது.
ஆகவே அங்கு வந்து வரிசையில் நின்று பொருள்கள் வாங்கிச் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இக்கட்டடத்தைச் சீரமைக்க ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டபோதும் உரிய நடவடிக்கை இல்லையென கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து கடையின் கூரைப் பகுதியை விரைவில் சீரமைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.