சிவகாசி பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள பட்டாசு இடைத்தரகர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல ஊர்களிருந்தும் பட்டாசு கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் சிவகாசிக்கு வருகின்றனர். சிவகாசி பேருந்து நிலையத்தில், வியாபாரிகள் பேருந்திலிருந்து இறங்கியதும், இடைத்தரகர்கள் அவர்களை அணுகுகின்றனர். இதில் பலர் வெளியூர் வியாபாரிகளிடம் மோசடி வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் ஒரு இடைத்தரகர் சிவகாசி பேருந்து நிலையத்தில் இறங்கிய வியாபாரியை பேசி தன்வசப்படுத்தியுள்ளார். வியாபாரியை ஒரு பட்டாசு கடைக்கு அழைத்துச் சென்ற இடைத்தரகர், பட்டாசுகளுக்கான பணத்தைப் பெற்றுள்ளார். அந்த வியாபாரி இடைத்தரகரை நம்பி சொந்த ஊர் திரும்பி விட்டார். ஆனால் செலுத்திய தொகைக்கான பட்டாசுகள் அவருக்கு வந்து சேரவில்லை. இடைத்தரகர்கள் கொடுத்த செல்லிடப்பேசி எண்ணும் இயக்கத்தில் இல்லை.
தற்போது அந்த வியாபாரி போலீஸாரின் உதவியை நாடியுள்ளார். இதுபோன்று நாள்தோறும் சிவகாசி பேருந்து நிலையத்தில் மோசடியில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.