விருதுநகரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கூடுதலாக பொறுப்பேற்று பணி செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். உள்பிரிவு பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரைப்படி பட்டா மாறுதல் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் மின் வசதி, கணினி மற்றும் இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல், தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஏற்கெனவே மூன்று கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இக்கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத பேராட் டத்தில் மாவட்டச் செயலர் வில்லியாழ்வார், மாநிலச் செயலர் பாண்டியன் ஆகியோர் பேசினர். இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.