விருதுநகர் நிறைவாழ்வு நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தொழிலதிபரால் கட்டப்பட்ட பாலம் வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.
விருதுநகரை சேர்ந்தவர் தங்கராஜ். தொழிலதிபரான இவர், கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறார். தனது தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் கட்சி சார்பற்ற இளைய தலைமுறை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விருதுநகர் கவுசிகா ஆற்றை ஒட்டிய பகுதியில் உள்ள நிறைவாழ்வு நகரில் மழைக்காலங்களில் சுமார் 300 வீடுகள், ஒரு தேவாலயம் உள்ள பகுதிக்கு ஓடையை கடந்து செல்லமுடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
இதை அறிந்த தங்கராஜ், பொதுப்பணித்துறை அனுமதி பெற்று அவர்கள் அளித்த வரைபடம் மூலம் ரூ. 50 லட்சம் மதிப்பில் 30 அடி அகலம், 60 அடி நீளத்தில் பாலத்தை கட்டி கொடுத்தார். பாலத்திற்கு கோகுலம் என பெயரிட்டு, வெள்ளிக்கிழமை இரவு பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
இது குறித்து தங்கராஜ் கூறுகையில், தான் பிறந்த ஊரை ஒவ்வொருவரும் மறக்காமல், தம்மால் முடிந்த உதவி செய்தால் அடிப்படை பிரச்னைகள் தீரும். மேலும், அரசிடம் அனைத்தையும் எதிர்பார்த்து காத்திராமல் தம் தேவைகளை தாமே பூர்த்தி செய்யும் அளவுக்கு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.