விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு உடனே நீக்க வேண்டும் என, இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த முடியாத அளவுக்கு கெடுபிடியான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 34 ஆண்டுகளாக கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
ஆனால், தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை இரண்டு முறை இந்து முன்னணி மாநிலப் பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தும், அவர் கண்டுகொள்ளவில்லை.
இதனால், விநாயகர் சிலையை நிறுவவும், ஊர்வலம் நடத்த முடியாத நிலையும் மாநிலம் முழுவதும் உருவாகியுள்ளதால், விநாயகர் பக்தர்கள் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை முதல் கருப்பு பட்டை அணிந்து, வீடுகளில் கருப்புக் கொடியும் ஏற்றியுள்ளோம்.
மேலும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளார்.
அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை எனில், புதன்கிழமை முதல் மாவட்டந்தோறும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மேலும், அனுமதி பெறாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படும் என்றார்.