விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலை கழகத்திற்கு உள்பட்ட மண்டல அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டியை, கல்லூரித் தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தொடங்கி வைத்தார். இதில், 20 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 230 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 6 மாணவ, மாணவிகள் ஒரு குழுவாக பங்கேற்றனர். இந்த போட்டிகளில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது. திண்டுக்கல் எஸ்பிஎம் பொறியியல் கல்லூரி இரண்டாமிடமும், தேனி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.