விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திரெளபதி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை பூக்குழி இறங்கினர்.
இக்கோயில் பங்குனி திருவிழா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தார். பின்னர், பூக்குழி திடலையும் சுற்றி வந்ததைத் தொடர்ந்து, காப்புக் கட்டி நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பக்தர்கள், அம்மனை பின்தொடர்ந்து கோவிந்தா கோஷத்துடன் பூக்குழி இறங்கினர். இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, நிர்வாக கமிட்டி தலைவர் ஷியாம் முன்னிலையில், உப தலைவர் சேது, செயலர் ரமேஷ் ,பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.