ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மாதக் குழந்தை உயிரிழந்தனர். மேலும், அவரது இரு மகள்களும் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராயகிரி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (32). இவர், டயர் வல்கனைசிங் மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (30). இவர்களது மகள்கள், அனுஷ்கா தேவி, அனுப்பிரியா மற்றும் 2 மாதக் கைக்குழந்தை தேவிப்பிரியா ஆகியோர்.
இந்நிலையில், வேல்முருகன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் தென்காசிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இவரே காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, தேவிபட்டினம் விலக்கு சோதனைச் சாவடி அருகே சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இதைக் கவனிக்காத வேல்முருகன், லாரி மீது மோதியுள்ளார். இதில், முனீஸ்வரி மற்றும் கைக் குழந்தை தேவிப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேல்முருகன், அனுஷ்கா தேவி, அனுப்பிரியா ஆகியோர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.