அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் பாலியல் பேர வழக்கு தொடர்பாக, உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராயினர். இவர்கள் மூவரையும், ஆகஸ்ட் 19 இல் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் பாலியல் பேர வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற் போது இந்த 3 பேரும் பிணையில் வெளியே வந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சில நாள்களுக்கு முன் நீதிமன்றத்துக்கு வந்த நிர்மலாதேவி தியானத்தில் ஈடுபட்டார். அதையடுத்து, அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்ற அவரை, போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து, அவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தார் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த அவர், மொட்டை தலையுடன் காணப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தால் மொட்டை அடிப்பதாக வேண்டிக் கொண்டாராம். அதன்படி, சில தினங்களுக்கு முன் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று தலை முடி காணிக்கை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும், ஆகஸ்ட் 19 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி பாரி (பொறுப்பு) உத்தரவிட்டார்.