சிவகாசியிலிருந்து சாத்தூருக்கு இரவு நேரப் பேருந்து இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் மன்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து கட்டடத் தொழிலாளிகள் உள்பட பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானார் தினசரி சிவகாசிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள், வேலையை முடித்து இரவில் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இரவு 10.30 மணியளவில் சிவகாசியிலிருந்து சாத்தூருக்கும், சாத்தூரிலிருந்து சிவகாசிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்பின்னர், சாத்தூரிலிருந்து சிவகாசி வரவேண்டும் என்றாலோ, சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லவேண்டும் என்றாலோ விருதுநகர் சென்றுதான் செல்லமுடியும்.
மேலும், சிவகாசியிலிருந்து கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரத்தில் செல்ல வேண்டும் என்றாலும், விருதுநகர் சென்றுதான் செல்ல முடியும்.
சிவகாசியிலிருந்து விருதுநகர், மதுரைக்கு இரவு நேரப் பேருந்து இயக்கப்படுவதைப் போல, சிவகாசியிலிருந்து சாத்தூருக்கும் இரவு நேரப் பேருந்து இயக்கவேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.