விருதுநகர் ரோசல்பட்டி ஊருணியில் கொட்டப்பட்டிருந்த விஷம் கலந்த அரிசியை தின்ற 7 ஆடுகள் சம்பவ இடத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தன.
விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாத்தப்பன் மகன் கருப்பசாமி(40). இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள ஊருணி மற்றும் நிலங்களில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை ரோசல்பட்டி ஊருணியில் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. அப்போது, ஊருணி அருகில் உள்ள பருப்பு ஆலை ஊழியர்கள் எலியை கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்து கலந்த அரிசியை கொட்டியுள்ளனர். இதை தின்ற 7 ஆடுகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தன. மேலும், உயிருக்கு போராடிய 3 ஆடுகள் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊருணியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந் நிலையில், குருணை மருந்து கலந்த அரிசி, தண்ணீரில் கலந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஏற்கெனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே ஊருணியில் விஷம் கலந்த அரிசியை தின்றதால் பல ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.