திருச்சுழி வட்டம், மாங்குளம் கிராமத்தில் சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சுழி வட்டம், பரளச்சி கிராமத்திலிருந்து பூலாங்கால் செல்லும் வழியில் உள்ளது மாங்குளம் கிராமம். இக்கிராமத்தின் நுழைவுப்பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று மண்அரிப்பு ஏற்பட்டதாலும், இந்த மின்கம்பத்துக்கும், அடுத்துள்ள மின்கம்பத்துக்கும் அதிக இடைவெளி உள்ளதாலும் பாரம் தாங்காமல் படிப்படியாகச் சாயத்தொடங்கியது.
தற்போது ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த மின்கம்பங்களும் சாயத்தொடங்கியுள்ளது. இதனால், இப்பகுதியைக் கடந்து செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து மின்வாரியத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழியேதான் பள்ளி மாணவர்கள் தினமும் சைக்கிளில் சென்று வருகின்றனர். எனவே, மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்னர், சாய்ந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.