சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் 9ஆம் ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 17ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 18ஆம் தேதி அதிகாலை முதல் கோ பூஜை, கணபதி, சுதர்ஸன, மஹாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு வகையான ஹோமம் நடைபெற்றது.
பின்னர் காலை 11 மணிக்கு மேல் சாத்தூரப்பனுக்கும் - ஸ்ரீதேவி பூதேவிக்கும் கோயிலில் உள்ள சாத்தூரப்பன் சன்னிதியில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள படந்தால், மேட்டமலை, சடையம்பட்டி, சத்திரபட்டி, கொல்லபட்டி, வெங்கடாசலபுரம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், உபயதாரர்களும் செய்திருந்தனர். பின்னர் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு மேல் சாத்தூரப்பன்-தேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பரதநாட்டியம், பஜனை, கீர்த்தனை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.